மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்..ஆளுநருக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள கே.பாலகிருஷ்ணன் அழைப்பு
மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்..ஆளுநருக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள கே.பாலகிருஷ்ணன் அழைப்பு
சென்னை:
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ் நாட்டின் விருப்பம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும். ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை இன்று களேபாரங்களுடன் நடந்து முடிந்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கும் போதே திமுக கூட்டணி கட்சியினர் கூச்சல் குழப்பம் எழுப்பி கச்சேரியை ஆரம்பித்தனர். ஆளுநர் ரவியின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையில் சில பகுதிகளை விட்டு விட்டு வாசித்து முடித்தார்.
உடனே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.
ஆளுநர் அரசு எழுதி கொடுத்த உரையை புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆளுநர் வாசித்த உரையை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே அவைக்குறிப்பில் எடுத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருக்கும் போதே விறுவிறுவென்று சட்டசபையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரைக்கும் நடக்காத சம்பவங்கள் இன்றைக்கு அரங்கேறின. ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் கருத்து கூறினர்.
ஆளுநரின் நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார்.
அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழ் நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது. அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான பதிலடி என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார்.
தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார்.
எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது.
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ் நாட்டின் விருப்பம். சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.