கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை வழிபடுவதற்காக அழைத்து சென்றார் மாவட்ட ஆட்சியர்!
கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை வழிபடுவதற்காக அழைத்து சென்றார் மாவட்ட ஆட்சியர்!
திருவண்ணாமலை:
செங்கம் அருகே தென் முடியனூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் வழிபடுவதற்காக அழைத்து சென்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்து உள்ளது தென் முடியனூர் கிராமம். இங்கு அமைந்து இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலுக்கு செல்ல பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.
கடந்த சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலித் மக்கள் கோரிக்கை
இது தொடர்பாக பட்டியலின மக்கள் தொடர்ந்து பல முறை கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அண்மையில் தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட அனுமதி வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அனுமதியளித்த ஆட்சியர்
தொடர்ந்து கோயிலுக்குள் சென்று வழிபட தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து பட்டியலின மக்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்தார்.
உயர் சாதியினர் எதிர்ப்பு
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் தென் முடியனூர் முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த உயர் சாதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
500 க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு
இதனை அடுத்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஊர் மக்களுடன் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500 க்கும் அதிகமான போலீசார் தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் அருகே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கோயிலுக்குள் தலித் மக்கள்
உயர் சாதியினரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தலைமுறை தலைமுறையாக கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
அவர்கள் உள்ளே வரக்கூடாது என்பதால் கோயில் பூட்டு போடப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைத்து சென்றார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் செல்ல முடியாத பகுதியாக இருந்த கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியோடு வழிபட்டனர்.
இதுகுறித்து பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,
“தென் முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு யாராலும் உரிமை கோர முடியாது. கோயில்கள் என்பது அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவைதான். இங்கு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.”என்றார்.