Politics

இந்த நிதிநிலை அறிக்கை நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவம் – ஓபிஎஸ்

கல்விக் கடன் ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஓபிஎஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளித் தினத்தன்று பட்டாசுகளை கொளுத்தும் போது வானத்தில் காணப்படும் கண் கொள்ளாக் காட்சியை பார்த்தவுடன் அனைவருக்கும் வியப்பும், பிரமிப்பும் ஏற்படும்.

ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். இது போன்று கண்ணுக்கு விருந்தாக காட்சி அளிப்பதாக இன்று தமிழ்நாடு சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதே தவிர மக்கள் மனம் குளிரும்படியாக அமையவில்லை.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை திமுக அரசால் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை. இந்த அறிக்கையிலாவது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் திட்டங்கள் இருக்காதா என்று எதிர்பார்த்த தமிழக அரசுக்கும் விடிவுகாலம் பிறக்குமா என காத்திருந்த ஏழை எளிய மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

நிதிநிலை அறிக்கை பக்கம் 5 இல் கோவிட் பெருந்தொற்று முந்தைய 2019-2020 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டால் ஏறத்தாழ ரூ 5000 கோடி அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், கொரோனா பெருந்தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் வருவாயில் ஏற்பட்ட உயர்வு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 6 மாத காலம் தாமதப்படுத்தியதில் ஏற்பட்ட மிச்சம், காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாததால் ஏற்பட்ட செலவுக் குறைப்பு ஆகியவைதான் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 1000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சென்ற நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 2213 BS VI புதிய டீசல் பேருந்துகளும் 500 புதிய மின் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 2,713 பேருந்துகள் கொள்முதல் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடாதது அந்த திட்டம் கைவிட்பட்டுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உயர்த்துதல் ஆகியவை குறித்து நிதி ஒதுக்கப்படாதது போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2021- 2022 ஆம் ஆண்டில் இருந்த 11,955 கோடி ரூபாய் இருந்து நடப்பாண்டில் 7,825 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என பெருமையாக கூறப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வுதான், மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதம் ஒரு முறை மின்கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது பொதுமக்களை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. நிதி ஒதுக்கீட்டை குறிப்பிடாததன் காரணமாக, ஒரு வேளை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற நினைப்பில் நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்துள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடாதது அவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்கு 2021- 22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

நடப்பாண்டில் மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஒரு தொகை பிடிக்கப்பட்டு அதிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் சுயநிதி திட்டம். இதற்காக ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகையிலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்பட்டு வந்த 80 ரூபாய் என்பது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இருப்பினும் இந்த நிதித் தொகையை பெறுவதற்கு நீண்ட நாள் காத்திருக்கக் கூடிய நிலை இருக்கிறது. இது சுயநிதித் திட்டம் என்பதால் இதற்கான விண்ணப்பங்களை உடனடியாக தீர்வு செய்ய வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் புதிதாக 5,76,725 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் லட்சக்கணக்கானோரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கான அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே சமயத்தில் தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் பயனாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்திருப்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. இந்த நிதிநிலை அறிக்கையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதாக பெருமிதம் கொள்ளப்பட்டு இருக்கிறது.

சமூக நலன் அடிப்படையில் எண்ணிபார்க்கிற போது பற்றாக்குறைதான் சமூக நலனைக் காப்பதற்கு, உடனடியாகப் பசியைத் தீர்ப்பதற்கு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஆயுதம் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை முடக்குதல், பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புதல், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல், அனைத்து அரசுப் பணிகளையும் வெளி முகமையின் மூலம் மேற்கொள்ளுதல் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துதல் போன்றவற்றின் மூலம் பற்றாக்குறையை குறைத்தல் என்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுமக்கள் நம்பியிருந்த முக்கியமான அறிவிப்புகளான கல்விக் கடன் ரத்து, நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுந்து விநியோகம், எரிவாயு மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு, மாதம் ஒரு முறை மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு ஓபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *