பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி
பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி
மத்தியில் உள்ள நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்
புதுவை மாநிலத்தில் காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பிரதமர் மோடியின் திறமையின்மையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது.
இதனை எடுத்துக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் பாஜக அவரது பாதயாத்திரயை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து தோல்வி அடைந்தது தற்போது ராகுல் காந்தியின் பதவியை பறித்து வரும் தேர்தலில் போட்டியிடாமல் செய்துள்ளனர் இது கடும் கண்டனத்துக்குரியது” என கூறினார்
இதைத் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் கண்டன பேரணி நடைபெற்றது.
நெல்லித்தோப்பு அண்ணா நகர் பகுதியில் தொடங்கிய பேரணி தொகுதி முழுவதும் சென்று ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது.
பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜிவ்காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,
“அதானியின் பலகோடி சொத்து சேர்க்கைக்கு மோடியே காரணம் என நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆதாரத்துடன் கூறினார்
இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை. இதனால் திட்டமிட்டு ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.
இப்போது ஆளுங்கட்சியினரே நாடாளுமன்றத்தை முடக்குகின்ற சரித்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி படைத்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தை நடத்தினால் அதானி விவகாரம் வெளியே வரும். நிலைக்குழு வைக்க வேண்டியிருக்கும். நரேந்திர மோடியின் மிகப்பெரிய ஊழல் வெளியே வந்துவிடும் என்பதால், அதனை மூடி மறைக்கவே ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்துள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை. ஆகவே தான் ராகுல்காந்தி,
”எனது பதவியை பறிக்கலாம், என்னை குறிவைத்து தாக்கலாம் அதற்கு கவலைப்படவில்லை. ஜனநாயகத்தை காக்க உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நரேந்திரமோடியின் ஆட்சியை தூக்கி எறியும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.