செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி 1000 பேர் பங்கேற்பு!
செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி 1000 பேர் பங்கேற்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க கோரி நடந்த பைக் பேரணியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கியது.
பேரணி காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் “வேண்டும் வேண்டும் செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும்” என கோஷங்கள் எழுப்பபட்டன
பைக் பேரணியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து வியாபாரிகள் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் மூலமும், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மூலமும் 2300 மனுக்கள் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் கோரி கோட்டாட்சியர் ஆர்.அனாமிகாவிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.
செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,
01.04.1959ம் ஆண்டில் செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
செய்யாறு கோட்டம் தவிர அனைத்தும் வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 64 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தினை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்.
செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்கா களில் உள்ள கிராமங்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமை இடமான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால விரயமும் பண விரயமும் ஆகிறது.
செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பெற்றால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேலும் வளர்ச்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் பேரிடர் காலத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்திட முடியும். மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படும் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக காவல்துறையினரால் எடுக்க பேரூதவியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2016 ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
தமிழக முதல்வர் கூறிய வாக்குறுதிணை நிறைவேற்றிடும் வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது