FEATURED

சென்னை: புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன டெலிகோபால்ட்கதிர்வீச்சு சிகிச்சை கருவி!

சென்னை: புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன டெலிகோபால்ட்கதிர்வீச்சு சிகிச்சை கருவி  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப் பட்டுள்ளது 

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலான’ஈக்வினாக்ஸ்’ என்று அழைக்கப்படும் உலகத்தர தொழில்நுட்பத்திலானது நிறுவப் பட்டுள்ளது

புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்கான டெலிகோபால்ட் கருவி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சைகளைக் காட்டிலும் துல்லியமாக புற்றுநோய் செல்களை இது அழிக்கவல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தை பொருத்து அவை வேறுபடுகின்றன.

அதன்படி, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு தேவையின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

கதிரியக்க சிகிச்சைகளைப் பொறுத்தவரை அதி நவீனமான ஒன்றாகக் கருதப்படுவது ‘ட்ரூபீம் ரேடியேஷன்’ முறை மற்றும் டெலிகோபால்ட் முறை தான். அந்த வகையான சிகிச்சை மூலம் மிகத் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளை அகற்றலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பிற கதிரியக்க சிகிச்சைகளில் புற்றுநோய் கட்டிகளுக்கு அருகே உள்ள உறுப்புகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகளோ அல்லது எதிர்விளைவுகளோ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் புறக் கதிர்வீச்சு சிகிச்சைக்காக அதிநவீன டெலிகோபால்ட் கருவி மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நிறுவப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் கதிர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.சரவணன் கூறியதாவது:-

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலானது.

‘ஈக்வினாக்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த கருவியானது உலகத்தர தொழில்நுட்பத்திலானது. இந்த சிகிச்சையின் கீழ் காமா கதிர்கள் உருவாக்கப்பட்டு, அதனை புற்றுநோய் பாதித்த உடல் திசுக்களின் மீது மட்டும் செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்.

இக்கருவியின் மூலம் உயர் ஆற்றல் காமா கதிர்களை செலுத்துவதற்கு முன்பு சி.டி. சிமுலேட்டர் என்ற துணைக்கருவி மற்றும் மென் பொருள் உதவியுடன் சிகிச்சை விவரங்கள் பதிவேற்றப்படுவதால் மிகத் துல்லியமாகவும், துரிதமாகவும் புற்றுநோய் செல்களை அழிக்க இயலும்.

கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்ற பல்வேறு புற்று நோய்களை முழுமையாக குணப்படுத்த இத்தகைய சிகிச்சை முறைகள் உதவும்.

புற்று நோய் 4 நிலைகளாக இருக்கும். முதல் மற்றும் 2-ம் நிலைகளில் கண்டு பிடித்து விட்டால் இந்த நவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

3 மற்றும் 4-ம் நிலை நோயாளிகளுக்கு பலவிதமான சிகிச்சை முறைகள் தேவைப்படும். அதாவது அறுவை சிகிச்சை, ஹீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

தமிழக அரசு புற்று நோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ராயப்பேட்டை மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள ‘லீனியர் ஆக்சல ரேட்டர்’ கருவியின் விலை மட்டும் ரூ. 22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இருந்த ‘கோபால்ட்’ கருவி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் பழமையாகி விட்டது. எனவே இப்போது புதிய கருவி நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். நோயாளிகள் காத்திருப்பு நேரமும் குறையும்.

இந்த கோபால்ட் கருவி தமிழகம் முழுவதும் 15 ஆஸ்பத்திரிகளில் நிறுவ திட்டமிட்டு 7 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

விரைவில் 8 இடங்களில் நிறுவப்படும். அரசின் ஒத்துழைப்பால்தான் இவ்வளவு அதி நவீன சிகிச்சை கிடைக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் கோபால்ட், லீனியர் ஆக்சலரேட்டர் மற்றும் எச்.டி. ஆர். முறையின் கீழ் 12 ஆயிரம் புற்றுநோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய இந்த சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இங்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *