2000 ரூபாய் நிறுத்தம் விவகாரம்.. ‘இது மோடி அரசின் கோமாளித்தனம்’ – கொந்தளித்த திருமாவளவன்!
2000 ரூபாய் நிறுத்தம் விவகாரம்.. ‘இது மோடி அரசின் கோமாளித்தனம்’ – கொந்தளித்த திருமாவளவன்!
“ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம் தான் எனினும் இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத்தன்மையும் பாதிக்கப்படும்”
தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று (20-05-2023) அதிரடியாக அறிவித்தது.
மேலும் மே மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் வரும் 2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என்றும் தெரிவித்தது.
இது மட்டுமல்லாமல் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம் என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் பணம் செல்லாதென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம் தான் எனினும் இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத்தன்மையும் பாதிக்கப்படும்.
உலக அரங்கில் இந்தியப் பொருளாதார நிலைத்தன்மை குறித்த நம்பகத்தன்மை கடுமையாகப் பாதிக்கப்படும். தேசியப் பொருளாதாரத்தின் மீதான பெரும் தாக்குதலாகவும் மாறும்.
அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைப்பதற்கான தந்திரமாக மோடி இதனைக் கருதலாம். ஆனால் இது மக்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மோடி அரசின் இந்தப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.