110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை!
110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை!
ராமேஸ்வரம்: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை துறைமுகம் அந் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது சேதமடைந்தது.
இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இந்தியாவின் நிதி உதவி மூலம் இத்துறைமுகமானது, வர்த்தக ரீதியிலான துறைமுகமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, 16.06.2023-ல் திறக்கப்பட்டது.
முன்னதாக, காங்கேசன் துறையிலிருந்து புதுச்சேரியிலுள்ள காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாத இந்திய வருகையின்போது, காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார்.