பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை – அதிமுக
பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை – அதிமுக
இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த தீர்மானத்தை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே அதிமுக – பாஜக தலைவர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ளும் என தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் அவசர ஆசோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் பின்வருமாறு:
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, கட்சியின் உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை’ சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.