இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் இதுவரை இரு தரப்பிலும் சேர்த்து 500 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனத்தைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தால் பல நாடுகளும் தத்தம் மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
மத்திய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235 256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் என்றும் அறிவித்திருக்கிறது.
இந் நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்களும் உள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், 18 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் nrtchennai@tn.gov.in, என்ற nrtchenna.in@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலும் இருந்தும் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்தும் தமிழர்கள் மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தூதரக அதிகாரி இதர தகவல்களை வழங்க எப்போதும் தயார் நிலையில் இருப்பார் எனவும் இந்திய மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா
கவனமாக இருப்பதுடன், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து, பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக இந்தியப் பிரதமர் நநேர்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சி அளிக்கிறது எனவும் இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம் எனவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் தாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.