LatestPolitics

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் வர அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ  வேண்டுகோள்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் வர அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ  வேண்டுகோள்

சென்னை: முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருமாறு அதிமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

கருணை அடிப்படையில்: “தமிழக சிறைகளில் உள்ள நீண்டநாள் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.

தொடர்ச்சியாக கோரிக்கைகள்: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசியல் சட்டப் பிரிவு 161ன் படியும் நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்கிற சூழலில், அரசு நிர்ணயித்த அத்தனை தகுதிகளையும் கொண்டவர்களாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் இருப்பதால், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் அல்லது சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி விரைவாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பாரபட்சம்: ஆனால், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. இதுவரை நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளில் ஒரு சிலர் விடுதலை பெற்றுள்ளனர். அதேப்போல் பரோல் பெற்றுள்ளனர்.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசால் கோப்புகள் அனுப்பப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. எனினும் அதன் மீதான நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் தான், பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, தமிழக அரசு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்.

அழுத்தம் தரவில்லை: ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் அந்த பரிந்துரையில் இடம்பெற்ற 3 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்பட 5 பேருக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இப்படியாக நீதிமன்றத் தலையீடு இல்லாமல் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலையோ அல்லது பரோலோ கிடைக்கவில்லை என்கிற சூழலே நிலவி வருகின்றது.

இந்த விவகாரத்தில் அரசு கொள்கை ரீதியாக விடுதலை முடிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், 49 ஆயுள் சிறைக்கைதிகளையும் வழிக்காவல் இல்லாத பரோலில் விடுதலை செய்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றது. இவ்விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பிய தமிழக அரசு அதற்குரிய அழுத்தம் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: ஆகவே, இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்.

மேலும், இக்கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *